சென்னையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...

சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...

கோயம்பேடு 100அடி சாலை - காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, 100 அடி சாலை- காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 93 கோடி ரூபாய் செலவில்,  4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணிகள், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது முடிவுற்றுள்ளது.இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து மேம்பாலத்தில் காரில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். கோயம்பேடு 100 அடிசாலையில் தினமும் ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றனர். இந்த பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் 2 சிக்னல் சந்திப்புகளில் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியமில்லை..  காளியம்மன் கோயில் தெரு சந்திப்பு வழியாக மார்க்கெட், ஆம்னி பஸ் நிலையம் செல்லக் கூடிய வாகனங்கள் மற்றும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு செல்லக் கூடிய சந்திப்புகளில் நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். கிண்டி, வடபழனியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக திருமங்கலம்,செங்குன்றம் மார்க்கத்திற்கு எளிதாக செல்ல முடியும்.  

முன்னதாக சென்னை வேளச்சேரியில் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்து, காரில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு 2 அடுக்கு மேம்பாலத்தின் மேல் பகுதியை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.