திருமணமான 4 நாட்களில் விபத்து... கார் மீது லாரி மோதி புதுமணத் தம்பதி பலி...

லாரி கட்டுப்பாட்டை இழந்து  கார் மீது கவிழ்ந்ததால் காருக்குள் இருந்த புதுமண தம்பதி 2 பேர்  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.

திருமணமான 4 நாட்களில் விபத்து... கார் மீது லாரி மோதி புதுமணத் தம்பதி பலி...

அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவர் மருந்து விநியோகஸ்தர். தாம்பரம் பெருங்களத்தூரை சேர்ந்த கார்த்திகா (30). இவர் தாம்பரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்.  இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 28 ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இருவரும் பெருங்களத்தூரில் உள்ள மனைவியின் தாய் வீட்டிலிருந்து அரக்கோணம் வீட்டிற்கு செல்ல இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள மப்பேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூவம் அருகே சென்று கொண்டிருந்த போது அரக்கோணத்திலிருந்து எதிரே வந்த சிமெண்ட் டேங்கர் லாரி கூவம் வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து  கார் மீது கவிழ்ந்தது.

இதில் காருக்குள் இருந்த மருத்துவர்  கார்த்திகா, அவரது கணவர் மனோஜ் குமார் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மப்பேடு  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தினர்.

பிறகு காரை உடைத்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த   விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாளில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.