கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மக்களின் இயல்பு வாழ்க்கை....

கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மக்களின் இயல்பு வாழ்க்கை....

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும், இதய நோயாளிகள் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேபோன்று, நீலகிரி மாவட்டம், உதகை சுற்று வட்டார பகுதிகளில், உறைபனியால் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. மேலும், சாலைகள் பனி சூழ்ந்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்பட்டதால், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இதேபோல், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.  இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஊதியம் கூட தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டின் பொருளாதாரம்....என்ன செய்யபோகிறது அரசாங்கம் ?!!!