விடாமல் பெய்த கனமழையால்...தண்ணீரில் சாய்ந்த நெற்பயிர்கள்...!

விடாமல் பெய்த கனமழையால்...தண்ணீரில் சாய்ந்த நெற்பயிர்கள்...!
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை :

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதால் இன்றும் பள்ளி மாணவ - மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். மேலும், பரமக்குடி டிஎஸ்பி அலுவலகம் அருகே மழையின் காரணமாக சாலையில் மரம் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திம்மாவரம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவாட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com