ஒ.பன்னீர்செல்வம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் - ஜெயக்குமார்

ஒ.பன்னீர்செல்வம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒ.பன்னீர்செல்வம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் - ஜெயக்குமார்

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறும், கட்சி பரபரப்புகள் அடங்கிய பிறகு கூட்டத்தை நடத்தலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார். 
ஆனால், பொதுக்குழுவை தள்ளிவைக்கும் அளவிற்கு கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ஒ.பி.எஸ். கடிதம் எழுதுவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், எடப்பாடிக்கு எழுதிய கடிதத்தை ஊடகங்களில் வெளியிட்டிருக்கக் கூடாது என்றும், விமர்சித்துள்ளார்.