"பிரச்சனைகளை திசை திருப்பவே ஒரே நாடு, ஒரே தேர்தல்" கே.பாலகிருஷ்ணன் தகவல்!

"பிரச்சனைகளை திசை திருப்பவே ஒரே நாடு, ஒரே தேர்தல்" கே.பாலகிருஷ்ணன் தகவல்!

மத்திய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கண்டித்தும்,   பாஜக அறிவித்தப்படி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், ஒன்றாம் எண் நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் சுமார் 30 நிமிடம் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அந்த நடைமேடையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.  ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபப்பு நீடித்தது..  

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் வேலையில் இருப்பவர்கள் வேலையை விடும் நிலைக்கு வந்தார்களே தவிர புதிய வேலை வாய்ப்பு இல்லை. இந்த பிரச்சனைகளை எல்லாம் திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். சனாதானத்திற்கு எதிராக பேசிவிட்டார்கள் என நாடு முழுவதும் பதற்றமான நிலையை உருவாக்குகிறார்கள்.

விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டத்தில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி பாஜக அரசின் மீது கவனத்தை ஏற்படுத்தவே "இந்தியா" என்ற பெயரை "பாரத்" என்று மாற்ற முயற்சிக்கிறார்கள். இன்று மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் நாளை (வரும் நாட்களில்) இந்தியா கூட்டணியின் சார்பில் நாடு தழுவிய அளவிலான போராட்டமாக மலரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.

இதையும் படிக்க: உதயநிதி பேச்சு; "முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா?" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!