” அரசு நிலத்திற்கான குத்தகை பாக்கியை ஒப்படைக்க ஒரு மாதம் கெடு” - சென்னை உயர்நீதிமன்றம்.

” அரசு நிலத்திற்கான குத்தகை பாக்கியை   ஒப்படைக்க  ஒரு மாதம் கெடு”  - சென்னை உயர்நீதிமன்றம்.

அரசு நிலத்திற்கான குத்தகை பாக்கி, 31 கோடி ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் என ஊட்டி ஜிம்கானா கிளப்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம்,  ஊட்டியில் உள்ள 10.32 ஏக்கர் அரசு நிலத்தை 1922ம் ஆண்டு ஜிம்கானா கிளப்க்கு குத்தகைக்கு விடப்பட்டது. பல்வேறு காலக்கட்டங்களில் அந்த குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டதுடன் குத்தகை தொகையும் மாற்றியமைக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கிளப் நிர்வாகத்தால் பாக்கி வைக்கப்பட்டிருந்த தொகையை செலுத்துமாறு 2011ம் ஆண்டு முதல் முறையாக தாசில்தார்  நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஒருமுறை குத்தகை தொகை மாற்றியமைக்கப்பட்டு அது தொடர்பாகவும் தாசில்தார் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு எதிராக கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது கிளப் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசால் நிலம் தங்களுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டதாக கூறினார். 

அரசால் குத்தகை விடப்பட்ட நிலையில் பாக்கி தொகையை செலுத்தக்கோரி தாசில்தார் நோட்டீஸ் அனுப்ப முடியாது என்பதால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், நிலத்தின் வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் அரசு நிர்ணயத்தை தொகையை செலுத்தக்கோரியே தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியதாக கூறினார். இருப்பினும் அந்த தொகையை செலுத்த கிளப் நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். 

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குத்தகை பாக்கியை செலுத்த கோரி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும்,  நடப்பாண்டு ஜூன் மாதம் வரை பாக்கி வைத்திருக்க கூடிய 31 கோடியே 16லட்சத்து 65ஆயிரத்து 786ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த கிளப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பாக்கி தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் உடனடியாக கிளப்பை அப்புறப்படுத்தி பாக்கி தொகையை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அந்த நிலத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க   | சொத்து ஆவணங்கள் மாயம்; தினேஷ் கார்த்திக் புகார்!