புதிய காவல் ஆணையர் அலுவலகங்களுக்கு காவல் நிலையங்களை பிரித்து உத்தரவு...

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு காவல் ஆணையர் அலுவலர்களுக்கு காவல் நிலையங்களை பிரித்து உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

புதிய காவல் ஆணையர் அலுவலகங்களுக்கு காவல் நிலையங்களை பிரித்து உத்தரவு...

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மூன்றாக பிரிப்பது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதன் படி சென்னையில் 137 காவல் நிலையங்களும் 80 போக்குவரத்து காவல் நிலையங்களும், 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்,  உள்ளன.

12 காவல் மாவட்டங்களை கொண்ட சென்னை காவல்துறையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகள் சென்னை காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் வரும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை துரிதமாக மேற்கொள்வதிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை மூன்றாக பிரிக்க முடிவு செய்து தாம்பரம் மற்றும் ஆவடியில் தனித்தனியாக காவல் ஆணையர் அலுவலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து உத்தரவிட்டது. ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும், தாம்பரம் காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி ரவியை தமிழக அரசு நியமனம் செய்தது.

ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய காவல் நிலையங்கள் பிரிப்பது தொடர்பான பணிகளை மேற்கொண்டு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் 104 காவல் நிலையங்களும், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டில் 20 காவல் நிலயங்களும், ஆவடி காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையங்களை பிரித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.