அனைத்து மாவட்டத்திலும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு...அமைச்சர் அன்பில் மகேஷ்....!!

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து டிசம்பர் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்..

அனைத்து மாவட்டத்திலும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு...அமைச்சர் அன்பில் மகேஷ்....!!

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆறுதல் கூறினாலும் இழப்பு என்பது இழப்பு தான் என கூறினார்.

மேலும், 3-4 மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் போது பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறிய அவர், நெல்லை சி.எஸ்.ஐ பள்ளியில் அடிப்படையே இல்லாமல் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதிப்பட கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு  செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இடம் இல்லாத பட்சத்தில் வாடகைக்கு இடம் தேர்வு செய்ய வலியுறுத்திப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஜனவரி 3-ம் தேதி முதல் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஓமிக்ரான் தொற்று பாதிப்பின் நிலை குறித்து வரும் வாரங்களில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் என சட்டப்பேரவையில் கூறியது நான் தான் என்றும்  அவரின் ஆர்வம், மக்கள் பணி பார்த்து ஆசையை வெளிப்படுத்தியதாகவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.