மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மொழிப்போர் தியாகிகள் தினம் :
இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
மலர்வளையம் வைத்து மரியாதை :
இந்நிலையில் சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து நினைவு மண்டபத்திற்கு பேரணியாக வந்த அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்...
உதயநிதியை முற்றுகையிட்ட மக்கள் :
முன்னதாக நினைவு மண்டபத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டு தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துனர். இத்தனை நாட்களாக மேடு, பள்ளமாக இருந்த சாலைகள் அமைச்சர் உதயநிதி வருகைக்காக இரவோடு இரவாக புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு, பேரணி வரும் இடம் முழுவதிலும் சிவப்பு கம்பளம் விரித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், தண்ணிர் வசதி செய்துதர கோரி அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.