புகைப்படம் எடுப்பதாக கூறி பாம்பை பிடித்து இடையூறு செய்த நபர்கள்- வனத்துறையினர் விசாரணை
கோவையில் புகைப்படம் எடுப்பதாக கூறி பாம்பை பிடித்து இடையூறு செய்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் பறவைகள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய சிறு சிறு பூச்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என சிலர் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பாம்பை புகைப்படம் எடுப்பதற்காக வாலைப் பிடித்து இழுத்து இடையூறு செய்துள்ளனர்.
தொடர்ந்து பாம்பை தூக்கி வேறு இடத்திற்கும் எடுத்துச் சென்று புகைப்படத்தை எடுத்துள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சியாக பதிவு செய்துள்ளார்.
அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல் குளம், குட்டை மற்றும் வனப் பகுதிகளில் சுற்றுச்சூழல் புகைப்படம் எடுப்பதாக கூறி பறவைகள் விலங்குகள், ஊர்வன, பூச்சிகள் என பல்வேறு உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
தற்போது பாம்புக்கு இடையூறு செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், கிருஷ்ணாம்பதி குளத்தில் பாம்பிற்கும், உயிரிகளுக்கும் இடையூறு செய்த அந்த நபர்களை அழைத்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதேபோல் புகைப்படம் எடுப்பதாக கூறி எந்த ஒரு உயிருக்கும் இடையூறு செய்யக் கூடாது மீறினால் அபராதம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.