வருவாய் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்...!
விருதுநகர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் வருவாய் துறை அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வருவாய் துறை அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நிறுத்தப்பட்ட உதவித் தொகையை நிறுத்தப்பட்ட மாதத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உதவித்தொகை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உரிய விசாரணை நடத்தி உடனடியாக உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிபிஎல் நம்பர் கேட்பதை நிறுத்திட வேண்டும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசாணை எண். 41 - ஐ மதிக்காத வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.