அதிமுகவுடன் அண்ணாமலை விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போல.... ஜெயக்குமார்!!

அதிமுகவுடன் அண்ணாமலை விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போல.... ஜெயக்குமார்!!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.  மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, செல்லூர் ராஜு, எஸ் பி வேலுமணி, பொன்னையன் மற்றும் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக என்பது ஒரு ஊழல் கட்சி எனவும் அவர்கள் குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என்று நினைத்து நிலையிலேயே அதிமுக என்ற இயக்கம் உருவானது எனவும் கூறினார்.  மேலும் திமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை தற்பொழுது வெளியிட்டுள்ள நிலையில் அந்த பணத்தை பறிமுதல் செய்து பொதுமக்களின் கஷ்டங்களை தீர்க்கலாம் எனவும் பல அணைகளை  கட்டலாம் எனவும் பல நலத்திட்டங்களை செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை இன்று தான் சொல்கிறார் எனவும் ஆனால் நாங்கள் வாழ்நாள் முழுவதும் திமுக ஊழல் கட்சி என்று சொல்லிக் கொண்டு வருகிறோம் எனவும் கூறிய ஜெயக்குமார் அதிமுகவில் அனைவரின் சொத்து விவரங்களையும் தெளிந்த நீரோடை போல தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து இருக்கிறோம் எனவும் ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.  மேலும் மடியிலே கனமில்லாத போது வழியில் பயம் எதற்கு தைரியமாக சொல்கிறேன் எது வேண்டுமானாலும் பண்ணுங்கள் நாங்கள் அதை எதிர் கொள்வோம் எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது எனவும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ்நாட்டில் பாஜக இருக்கிறது எனவும் பாஜக அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது எனவும் தெரிவித்த ஜெயக்குமார் 
அதிமுகவுடன் அண்ணாமலை விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போல  தான் எனக் கூறினார்.

இதையும் படிக்க:   எல்லா சமுதாயத்திற்கும் உரிய சமூக நீதி வேண்டும்.... ஜி.கே.மணி!!