தகராறில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைது..! இனி ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை - காவல்துறை!

சென்னையில் தகராறில் ஈடுபட்ட 8 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

தகராறில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைது..! இனி ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை - காவல்துறை!

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து காணப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு செய்த புதுக்கல்லூரி மாணவர்களை ஓட்டுநர் தட்டிக்கேட்ட நிலையில் நடத்துனரிடம் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு பெரும் தகராறில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாநகர் அருகே புதுக்கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் சென்னையில் தகராறில் ஈடுபட்ட 8 மாணவர்கள் மீது போலீசார் 3 காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்று மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் பொது இடங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வாறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்காமல் மன்னிப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ஆதாரங்களின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.