"வறுமை".. குழந்தையை 2.30 லட்சத்துக்கு விற்ற தாய்... கூண்டோடு கைதான கும்பல்!! சிக்கியது எப்படி?
விருதுநகரில் குழந்தையை விற்ற தாய் கைது.
விருதுநகர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் வறுமை காரணமாக தனது 1 வயது குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது குழந்தையை விற்க முடிவெடுத்தார். இது குறித்து தனது தந்தை கருப்பசாமியிடம் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து ஈரோடை சேர்ந்த கார்த்தி, சிவகாசியை சேர்ந்த செண்பகமூர்த்தி என்ற புரோக்கர்கள் மூலம் குழந்தையை விற்றுள்ளனர். அக்குழந்தையை மதுரையை சேர்ந்த கருப்பசாமி, பிரியா என்ற தம்பதியினர் தங்களுக்கு 20 வருடமாக குழந்தை இல்லாததால் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தை வாங்கி உள்ளனர். ஆனால் சட்டரீதியாக குழந்தையை தத்து கொடுக்கவில்லை.
இது குறித்து விருதுநகர் சைல்ட் (1098) லைனுக்கு சிலர் தகவல் கொடுத்துள்ளனர். சைல்ட் லைன் அதிகாரிகள் விருதுநகர் சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் குழந்தையின் தாயை கைது செய்து விசாரணை செய்ததில் குழந்தையை விற்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர் கொடுத்த வாகு மூலத்தின் அடிப்படையில் குழந்தை விற்பனை தரகர் மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதியினர் என அனைவரையும் விருதுநகர் சூலக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.