விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்..? உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தகவல்...
மத்திய அரசின் வழிக்காட்டுதல்படி, இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் சிலைகளை வைத்து வழிபட மக்கள் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டுமென ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு கொடுத்தும், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அனுப்பி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொது இடங்களில் இந்த ஆண்டும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார்.
மேலும், சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்த அவர், வழிப்பட்ட சிலைகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும் எனவும் விளக்கமளித்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.