காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள
லக்ஷ்மிபுரம் பகுதியில், அரசுநிலத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மக்கள் வசிக்ககூடிய இடத்திற்கு தனியார் நிறுவனத்தின் பேரில் வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது தனியார் நிறுவன சங்கத்தினர், மக்கள் குடியிருக்கும் இடங்களை கையகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டித்து இன்று பள்ளி குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் லட்சுமிபுரத்தில் டென்ட் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆதனூர் ஊராட்சி மன்றதலைவர் தமிழமுதன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்.