அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான காலை சிற்றுண்டி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் தரமான சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான காலை சிற்றுண்டி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சட்டபேரவையில் 110 விதியின் கீழ் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் தரமான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும் என்றும், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து  வசதிகளுடன் கூடிய தரமான தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும், முதற்கட்டமாக 25 மாநகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக மேம்படுத்தப்படும் எனவும் கூறினார்.

டெல்லியை போன்று தமிழ்நாட்டிலும் அரசு பள்ளி மாணவர்களில் தனித்திறனை வெளி கொண்டு வரும் பொருட்டு 150 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட இருபத்தி ஒரு மாநகராட்சிகள், 69 நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதிதாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.