கெளசல் கிஷோரின் அட்வைஸ்...தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக தமிழக அரசு இதை கொடுக்க வேண்டும்...ராமதாஸ் வலியுறுத்தல்!

கெளசல் கிஷோரின் அட்வைஸ்...தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக தமிழக அரசு இதை கொடுக்க வேண்டும்...ராமதாஸ் வலியுறுத்தல்!

மது அருந்தும் பழக்கத்தால் தனது மகன் இறந்துவிட்டதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கெளசல் கிஷோர் வேதனை தெரிவித்ததையடுத்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.  

மகனை இழந்த அமைச்சர்; வேதனையில் கூறிய வார்த்தைகள்:

முன்னதாக, உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் நடைபெற்ற மது போதை மறுவாழ்வு மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கெளசல் கிஷோர், மது அருந்துபவர்களின் வாழ்நாள் வேகமாகக் குறைந்துவிடும் என்றும், மதுவால் எனது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், மது பழக்கத்துக்கு  அடிமையான தனது மகன் அழகான குடும்பத்துடன் வாழமுடியாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறிய அவர், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு உங்கள் மகளையோ அல்லது சகோதரியையோ யாரும் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவித்த ராமதாஸ்:

இந்நிலையில், மது போதை மறுவாழ்வு மைய நிகழ்ச்சியில் இணையமைச்சர் கெளசல் கிஷோர் பேசியது தொடர்பாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில், ”உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்‌ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருப்பது உண்மையானவை என்றும், மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்.பியாக இருந்த போதும், அவரது மனைவி எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் மதுவுக்கு அடிமையான தனது மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்து, 2வயது குழந்தையுடன் மருமகள் கைம்பெண் ஆனார் ” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: என் மகன் குடிப்பழக்கத்தால் போய்விட்டான்...உங்கள் மகளுக்கு வேண்டாம்...வேதனை தெரிவித்த அமைச்சர்!

இந்த நிமிடமே கைவிட வேண்டும்:

இதே கொடுமை தான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம் என்றும், மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை  ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல.... நாளை அல்ல.... இன்றே, இந்த நிமிடமே  மதுப்பழக்கத்தை  கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்:

மேலும், மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.