அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடலை...தோண்டியெடுக்க சொன்ன அதிகாரிகள்..! - குடும்பத்தினர் வேதனை
ஒசூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த முதியவரின் உடலை அதிகாரிகள் தோண்டியெடுக்க சொல்வதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அடவிசாமிபுரம் கிராமத்தில் மல்லாப்பா என்பவரது குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக 1 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மல்லாப்பா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், அந்த இடத்தில் அவரது உடலை குடும்பத்தினர் நல்லடக்கம் செய்துள்ளனர். மல்லப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலம், கடந்த 2019ம் ஆண்டு அரசு சார்பில் விளையாட்டு மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள், அரசு நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவரின் உடலை தோண்டி எடுக்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தாங்கள் அருந்ததி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மிரட்டப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.