ஒரே நாளில் 7,616 நபர்கள்... 15 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமா?  சென்னை காவல்துறை வெளியிட்ட ரிப்போர்ட்!!

சென்னையில் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை மீறி செயல்பட்ட 7,616 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுளதாக சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 7,616 நபர்கள்... 15 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமா?  சென்னை காவல்துறை வெளியிட்ட ரிப்போர்ட்!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைகிரான் தோற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 6 ஆம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இரவு நேர ஊரடங்கின்போது 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த 10 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பகல் நேரங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்கெட் பகுதிகள், கடைத் தெருக்கள் போன்ற இடங்களில் பின்பற்றுவது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமலும், இரவு நேர ஊரடங்கை மீறி செயல்பட்டது தொடர்பாகவும் 7,616 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதத் தொகைதொகையாக 15 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கை மீறி பயணித்த 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை காவல்துறை சார்பில் 312 இடங்களில் வாகன தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டதில்  ஊரடங்கை மீறியது தொடர்பாக 428 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், காவல் துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கை மூலம் ஊரடங்கை மீறி பயணித்த 707 இருசக்கர வாகனங்கள், 59 ஆட்டோக்கள், 21 இலகுரக வாகனங்கள் மற்றும் 1 வாகனம் என மொத்தம் 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து காவல்துறை சார்பில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 15 இருசக்கர வாகனங்கள், 8 ஆட்டோக்கள், 5 இலகுரக வாகனங்கள் மற்றும் இரு வாகனங்கள் என மொத்தம் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து, தமிழக அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.