குப்பை லாரிகள் இயக்க தடை விதிக்க கோரிக்கை...! பொதுநல மனு தாக்கல்...!

குப்பை லாரிகள் இயக்க தடை விதிக்க கோரிக்கை...! பொதுநல மனு தாக்கல்...!

சென்னை மாநகரில் குப்பை லாரிகள் இயக்குவது குறித்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன.  இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதால், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க கோரி கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் மீது வலையை போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுவதாகவும், அதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதுடன், சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதைப் போல, சென்னையிலும் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதால், சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : பயன்படாத வெற்றி...இரு அணிகளாக பிளவு...புதிய முதலமைச்சர் யார்?!!!