ஓய்வு பெற்றவர்கள் ஆயுட்கால சான்றிதழை இந்த தேதிக்குள் சமர்பிக்க அறிவுறுத்தல்...!

ஓய்வு பெற்றவர்கள் ஆயுட்கால சான்றிதழை இந்த தேதிக்குள் சமர்பிக்க அறிவுறுத்தல்...!

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்களது ஆயுட்கால சான்றிதழை மார்ச் 15 க்குள் பணிமனையிலேயே சமர்ப்பிக்கலாம் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 20,398-க்கு மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ஏறத்தாழ 13,900-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம், பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் வரும் 2023-ஆம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் 15-ஆம் தேதிக்குள்ளாக, அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கும்போது, ஓய்வூதிய உத்தரவு ஆணை மற்றும் ஆதார் அட்டையின் நகல் கொண்டுசெல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ்சாலை தொழிற்கூடத்தில் (PRD), மண்டல தொழிற்கூடத்தில் (RWS) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்தந்த அலுவலகத்தில் ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். மேலும், கே. கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் (K.K.Nagar Printing Press) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கே. கே.நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் (Chrompet Workshop) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுபட்டவர்கள் தலைமையலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-2345 5801-Extn.268 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்...! வெளியான அறிவிப்பு..!