தென் மாவட்டங்களுக்கு சசிகலா அரசியல் சுற்றுப் பயணம்... அதிமுக அதிருப்தியாளர்களை சந்திக்கத் திட்டம்...

ஒரு வாரகால அரசியல் சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து சசிகலா தொடங்கியுள்ளார். ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் தஞ்சை நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

தென் மாவட்டங்களுக்கு சசிகலா அரசியல் சுற்றுப் பயணம்... அதிமுக அதிருப்தியாளர்களை சந்திக்கத் திட்டம்...

தென் மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட சசிகலா இன்று தனது பயணத்தைத் தொடங்கினார். சென்னை தியாகராய நகரில் உள்ள தமது இல்லத்தில் இருந்து, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் தனது பயணத்தைத் தொடங்கினார். அப்போது தொண்டர்கள் அவரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்

சென்னையில் இருந்து இன்று தஞ்சாவூர் செல்லும் சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் 28ம் தேதி, மதுரை சென்று முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, அதிமுக ஆதரவாளர்களை சந்திக்கிறார்.

அதைத்தொடர்ந்து கோரிப்பாளையத்தில் ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். வருகிற 29ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்தித்த பின், மறுநாள்  பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையில் பங்கேற்றுவிட்டு, தொண்டர்களை சந்தித்த பின் தஞ்சாவூர் திரும்புகிறார். 

நவம்பர் 1ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் அவர் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து மாறுபட்ட கருத்து நிலவும் சூழலில், அவரது சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.