சிறுமலை சுற்றுலாத் தலம் கோரிக்கை...!! அமைச்சர் பதில்...!!
நத்தம் தொகுதிக்குட்பட்ட சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வனத்துறையிடம் தடையில்லா சான்று, மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வரும் காலங்களில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்தின்போது நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், சிறுமலை பகுதி மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதி எனவும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகள் சுற்றுலாத்துறை மூலமாக செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் மொத்த மதிப்பீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஆராய்ந்து, வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுதல் வரையிலான பணிகள் நிறைவு பெறும் போது சிறுமலை பகுதி சுற்றுலாத்தலமாக அறிவிக்க பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.