அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகள் "பதவி இறக்கத்திற்கு தடை"..!!

அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகள் "பதவி இறக்கத்திற்கு தடை"..!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகளை, ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த பல்கலைக்கழக  உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வந்த 202 கல்வி மையங்களை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நிர்வாக பிரச்னை காரணமாக பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்தியது. அதன் பின் கல்வி மையங்களின் எண்ணிக்கை 59 ஆக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக சிறப்பு அதிகாரிகள் பலர் உபரி அதிகாரிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் பலரை உதவி பிரிவு அதிகாரியாக பதவி இறக்கம் செய்தும், ஊதியத்தைக் குறைத்தும் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், அவர்களை வேளாண் துறைக்கும், கல்லூரி கல்வி துறைக்கும் அயல் பணியாக மாற்றி அரசு உத்தரவிட்டது. இதேபோல 350  சிறப்பு அதிகாரிகளை, அரசு கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக நியமித்ததுடன், ஊதியத்தையும் குறைத்துள்ளதாக கூறி, கிருஷ்ணமூர்த்தி உள்பட 115 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், தங்களை ஆய்வக உதவியாளர்களாக நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்யவும் கோரப்பட்டிருந்தது.  

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, முதுகலை பட்டம் பெற்ற தங்களை, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும் ஆய்வக உதவியாளர்களாக நியமித்தது சட்டவிரோதமானது எனவும்  இதில் ஏற்கனவே பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர்களை ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க:மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?