தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட அணில் குட்டி... பல்லி குட்டி.. குரங்கு குட்டி...

தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட அணில் குட்டி... பல்லி குட்டி.. குரங்கு குட்டி...
Published on
Updated on
1 min read

சென்னை பயணி கைது

தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த அபூர்வ வகை உயிரினங்களை சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, அந்த உயிரினங்களை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பிய பின்னர் கடத்தல் பயணியை கைது செய்தனர்.

கூடையில் கடத்தல்

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலையம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர். 

அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி கூடை ஒன்றில் தாய்லாந்து நாட்டில் இருந்து அபூர்வ வகை உயிரினங்கள் எடுத்து வரப்படுவதால், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த பயணியையும் நிறுத்தி அவருடைய கூடையை திறந்து பார்த்து சோதனை செய்ததில் அவருடைய கூடைக்குள், அபூர்வ வகை உயிரினங்கள் இருந்தன.

அபூர்வ வகை உயிரினங்கள்

தென்கிழக்கு ஆஸ்திரேலிய வனப்பகுதியில் காணப்படும் சுகர் ரைடர் எனப்படும் பறக்கும் அணில் வகைகள் எட்டும், தென் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் காணப்படும் மர்மோசெட் என்ற குரங்கு குட்டிகள் மூன்றும், தென் அமெரிக்கா வனப்பகுதியில் காணப்படும் தேகு லிசார்ட் என்ற ராட்சச பள்ளி குட்டிகள் மூன்றும் இருந்தன. 

நோய் பரவும் அபாயம்

இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அதோடு வழக்கம்போல் பெசன்ட் நகரில் உள்ள வன குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தினார்கள். இவைகள் அனைத்துமே இந்தியாவுக்குள் கொண்டு வர தடை செய்யப்பட்டவைகள். மேலும் இவைகளினால் வெளிநாட்டு நோய் கிருமிகள் பெரும் அளவு இந்தியாவுக்குள் பரவி விடும், அதோடு சர்வதேச வன உயிரின துறையில் முறையான அனுமதி பெறவில்லை, இந்திய வனத்துறையின் அனுமதியும் இல்லை. இதை அடுத்து இந்த உயிரினங்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர்.

அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள் இந்த 14 அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கே விமானத்தில் திருப்பி அனுப்புகின்றனர். அதற்காகவும் செலவை அந்த உயிரினங்களை கடத்தி வந்த பயணியிடமே வசூலிக்கின்றனர். மேலும் சட்ட விரோதமாக, இந்த உயிரினங்களை கடத்தி வந்த பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com