சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவல்ல, மரியாதை... முதல்வர் ஸ்டாலின்

சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவல்ல, மரியாதை... முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து மாமல்லை தலசயனப் பெருமாள் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினியை அருகே அமர்த்தி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணவருந்தியதற்கு பாராட்டுகள் குவிந்தன.

இதனிடையே, இன்று குறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான 4.5 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் முதல்வருக்கு ஊசிமணி மாலை அணிவித்து அஸ்வினி மரியாதை செலுத்தினார். பின்பு அங்கிருந்த மக்களிடையே செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள வீடுகளுக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அத்துடன் அஸ்வினி வீட்டுக்கும் சென்றார். தனது வீட்டிற்கு வந்ததிற்கு ரொம்ப நன்றி என் முதல்வரிடம் தெரிவித்தார் அஸ்வினி. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அளித்த மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.

இந்த விழா தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து  பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவரையும் விடாமல் சுயமரியாதையும், சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என்றும் சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை என்றும் நெகிழச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com