வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறி, வாக்கு எண்ணிக்கை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்ட சரஸ்வதி, சத்தியநாராயணன், முத்துக்கனி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே துவங்கி விட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையம், சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக கூறி, மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்குகளிலும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.