வரியைக் குறைக்க வாய்ப்பில்லை ...நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு டிடிவி கண்டனம்
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதி அமைச்சர் கூறியிருப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கிட்டதட்ட 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 யை தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதி அமைச்சர் கூறியிருப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்பதை மறுக்க முடியாது என்றாலும், அவற்றின் மீதான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க, தற்போது அதனை செய்ய மறுப்பது மக்களை ஏமாற்றும் வேலை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவராமல், விலைவாசியை குறைக்க முடியாது என்பதால், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.