என் மனைவியை ஆபாசமாக பேசினான்... அதனால் தான் கொலை செய்தேன் - கணவர் பரபரப்பு வாக்குமூலம்
திண்டுக்கல் அருகே குடிபோதையில் தனது மனைவி குறித்து ஆபாசமாக பேசிய நண்பரை ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் கடந்த 8 ஆம் தேதி மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், தோமையார்புரம் அருகே காட்டுப்பகுதியில் மறைந்திருந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அலெக்சாண்டரை கொலை செய்து விட்டு வந்து பதுங்கியிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த அலெக்சாண்டரின் நண்பரான ஸ்டாலினுடன் மது அருந்தியதாகவும், அப்போது, ஸ்டாலினின் மனைவி குறித்து ஆபாசமாக பேசியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த ஸ்டாலின், 5 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து அவரை அலெக்சாண்டரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.