பிற மாநிலங்களிலும் தமிழை பரப்ப வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என கூறிய ஆளுநர் ஆர்.என் ரவி, பிற மாநிலங்களிலும் தமிழை பரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிற மாநிலங்களிலும் தமிழை பரப்ப வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா, அப்பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி பட்டங்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி குறிப்பிட்டது போல் தமிழ் தொன்மையான மொழி என தெரிவித்தார்.

மேலும் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும் என கூறிய அவர், உலகை வழிநடத்தும் நாடாக இந்தியா இருப்பதாகவும், அதில் தமிழ்நாடு முக்கியத்துவம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அப்போது ஆளுநர் தெரிவித்தார். தொடர்ந்து தொழில் கட்டமைப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக கூறிய அவர், மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் எனவும் சூளுரைத்தார்.