முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான ஓட்டலில் சோதனை....

ஓசூரில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான ஓட்டலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான ஓட்டலில் சோதனை....

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஏலகிரி உள்ளிட்ட 28 இடங்களில் தமிழக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் ஓட்டல்களில் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஓசூர் முதல் சிப்காட்  பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான ஓட்டலில் கோவை மண்டல கூடுதல் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் குழுவினர் இன்று  காலை 7 மணி முதல் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முக்கிய ஆவணங்கள் ஏதும் இருக்குமா என்ற கோணத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒசூரிலும் சோதனைக்கு பின்னரே முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கி உள்ளதா என்பது தெரியவரும்.

இந்த சோதனையையொட்டி சோதனை நடைபெறும் ஓட்டல் முன்பு 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.