”தனி மனிதன் மீது கடன் சுமையை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு” - அண்ணாமலை

தமிழ்நாட்டில் திமுக அரசு ஒவ்வொரு தனி மனிதன் மீதும் தலா மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் ”என் மண் என் மக்கள்” யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, வடதாரை பகுதியிலிருந்து யாத்திரையை தொடங்கினார். அப்போது அவருக்கு 10 அடி உயர மாலையை பாஜகவினர் அணிவித்தனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

இதையும் படிக்க : சாலையில் கொளுந்து விட்டு எரிந்த ஆம்னி பேருந்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

பின்னர்,  வடதாரையில் யாத்திரையை தொடங்கி காமராஜபுரம், சின்னகடைவீதி, பூக்கடை கார்னர் வழியாக புதுக்காவல் நிலையம் சென்றார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், 33 சதவீத இட ஒதுக்கீடு பற்றி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவையில் வெறும் இரண்டு பெண்களுக்கு மட்டுமே  இடம் கொடுத்துள்ளதாகவும், பிரதமர் மோடி அமைச்சரவையில் ஒன்பது பெண்கள் அமைச்சர்களாக உள்ளதாகவும் கூறினார்.

9 ஆண்டு காலத்தில் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதி 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும், ஆனால் தமிழ்நாட்டில் திமுக அரசு கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளதாகவும் விமர்சித்தார். வரும் 2024 ஆம் ஆண்டு மக்கள் பாஜகவை ஆதரித்து மோடியை மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.