குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்..... பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு....
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் தசரா திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிசா சூரசம்காரம் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து திருக்கோவிலுக்கு வருவது வழக்கம்.
விரதம் இருக்கக் கூடிய பக்தர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணிக்கை பெற்று மஹிசா சூரசம்காரம் நடைபெறும் அன்று கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தசரா திருவிழாவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள கொடியேற்றம் மற்றும் மஹிசா சூரசம்காரம் நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விரதம் இருக்கக்கூடிய பக்தர்கள் உள்ளூரிலேயே வேடமணிந்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் வசதிக்காக 7-ம் தேதி மற்றும் 11,12,13,14- ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.