ஆன்மீக பயணம் அழைத்துச் செல்லும் இந்து சமய அறநிலையத்துறை...!

ஆன்மீக பயணம் அழைத்துச் செல்லும் இந்து சமய அறநிலையத்துறை...!

இந்து மதத்தைச் சேர்ந்த இறை நம்பிக்கை உடைய 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து 200 பேரை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. 

20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்களை தேர்ந்தெடுத்து அந்த 200 பேர்களின் விபரங்களை அனுப்புமாறு இணை ஆணையர்களுக்கு ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆன்மீக பயணமான காசி அழைத்துச் செல்லப்படுவோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் மற்றும் இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. 

மேலும், ஆன்மீக பயணம் மேற்கொள்வோர், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும் எனவும் நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, இந்த பயணத்தின் போது விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகளையும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.  

இதற்கு மத்தியில் தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நேற்று தொடங்கி டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்க : இந்தியாவிற்கே முன்னோடியாக அமையும் தமிழகம்...முதலமைச்சர் பெருமிதம்!