பாக்கியை வசூலிக்கும் தனியார் பள்ளிகள்... தமிழக அரசின் நடவடிக்கை என்ன..? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாக்கியை வசூலிக்கும் தனியார் பள்ளிகள்... தமிழக அரசின் நடவடிக்கை என்ன..? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் தாக்கல் செய்த மனுவில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்க கூடாது எனவும், கட்டணம் செலுத்தாத மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என தமிழக அரசு கடந்த உத்தரவு பிறப்பித்திருந்தும், தனியார் பள்ளிகள், தொடர்ந்து இச்செயல்களில் ஈடுபடுவதாகவும், அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
நடப்பு 2021-22 ம் கல்வியாண்டுக்கான ஆன் லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்து கொள்ள, கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
கட்டண பாக்கியை செலுத்தும்படி நிர்பந்திக்காமல், மாணவர்களை அடுத்த வகுப்புக்கு முன்னேற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 2021-22ம் கல்வியாண்டுக்கான புத்தகங்களை வழங்கி, ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
பொருளாதார ரீதியில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தேவையான உபகரணங்களையும்,  இணையதள வசதியையும் கொரோனா நிவாரண உதவியாக வழங்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை மாதந்தோறும் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
கட்டண பாக்கியை தள்ளுபடி செய்து, ஆன் லைன் வகுப்புகளை திறமையான முறையில் நடத்த மாற்று நடைமுறைகளை கண்டறிய  கல்வித்துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதுடன், குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட  வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு அடுத்த வாரத்துக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.