
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சத்தியா, சிவக்குமார் இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் சத்யா என்பவர் ரமேஷ் என்பவரையும், சிவக்குமார் சரண்யா என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர். சத்யா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், சிவக்குமாரின் மனைவி தனது மூன்றரை மாத பெண் குழந்தையை கடந்த 2012-ம் ஆண்டு தத்து கொடுத்தார்.
இதற்கிடையில் சத்யாவின் கணவர் ரமேஷ் புற்று நோயால் கடந்த 2019-ம் ஆண்டு இறந்த நிலையில், தத்து கொடுத்த குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று பெற்ற தாய் சரண்யா, அம்மா பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த பிரச்னை காரணமாக சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொண்ர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வு, குழந்தை வளர்ந்து சிறுமி ஆகிவிட்டதால், அவரை வளர்ப்புத்தாய் தான் வளர்க்க வேண்டும் என்று கூறி, அவரிடம் சிறுமியை ஒப்படைக்க உத்தரவிட்டனர். மேலும் பெற்ற தாயை வாரம் ஒருமுறை சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.