காப்பர் கம்பிகளை திருட முயற்சித்து மின்சார பெட்டிக்குள் கைவிட்ட நபர்.... கைகள் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி...!!

சென்னையில் காப்பர் கம்பிகளை திருட மின்சார பெட்டிக்குள் கைவிட்ட நபர், மின்சாரம் தாக்கி இரு கைகளும் கருகிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

காப்பர் கம்பிகளை திருட முயற்சித்து மின்சார பெட்டிக்குள் கைவிட்ட நபர்.... கைகள் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி...!!

சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனது நெருங்கிய நண்பர்களான விஜி மற்றும் பாலாஜி ஆகிய இருவருடன் சேர்ந்து கடந்த செவ்வாய் கிழமையன்று திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளை செய்து வரும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான குடோனுக்கு சென்றுள்ளார்.

அப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை நோட்டமிட்டு வந்த அம்மூவரும் அங்கு நுழைந்து அங்குள்ள மின் சாதனப் பொருட்கள் மற்றும் காப்பர் கம்பிகளை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. குடோனில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக நினைத்து உள்ளே நுழைந்த மூவரின் முருகன் என்பவர் மின்சாரப் பெட்டிக்குள் கைவிட்டு காப்பர் கம்பிகளை வெட்டி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக முருகனுக்கு மின்சாரம் தாக்கியதில் முருகனின் இரு கைகளும் கருகின.

முருகனின் அலறல் சத்தம் கேட்டு குடோனிற்கு ஓடி வந்த காவலாளி இச்சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கை கருகிய நிலையில் இருந்த முருகனை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், குடோனுக்குள் திருட முயன்று சிக்கிய விஜி மற்றும் பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.