விசாரணைக்காக வந்த ரவுடி மரணம் ..? சாவில் சந்தேகம் இருப்பதாக பாஜகவினர் முற்றுகை..!

விசாரணைக்காக வந்த ரவுடி  மரணம் ..?   சாவில் சந்தேகம்  இருப்பதாக பாஜகவினர் முற்றுகை..!

மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற பிரபல ரவுடி வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மயிலாப்பூர் பல்லக்குமா நகர் பகுதியில் சேர்ந்தவர் சுகுமார் (வயது 36). மயிலாப்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் 'C' category ரவுடியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி மாலையில் சரித்திர பதிவேடு தணிக்கை செய்வதற்காக சுகுமாரை காவல் நிலையத்திற்கு வரும்படி மயிலாப்பூர் போலீசார் அழைத்துள்ளனர். காவல் நிலையம் வந்து தணிக்கை செய்து கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக, போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மேல் சிகிச்சைக்காக மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  

இந்தநிலையில், சுகுமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரத்த அழுத்தம் அதிகமாகி, மூளையில் உள்ள நரம்பு வெடித்து, மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு  சுகுமார் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தாக உறவினர்கள் கூறினர். மேலும், உயிரிழந்த சுகுமாரின் சகோதரர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இதனால், பாஜக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் சுகுமார் உயிரிழந்த மருத்துவமனையில் முற்றுகையிட்டுள்ளனர். 

சுகுமார் தற்போது பெசன்ட் நகரில் வசித்து வந்ததாகவும், தற்போது அவர் மீது எந்த வழக்குகளும் இல்லை என்வும்,  அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன என கூறினார். சுகுமார் தற்போது தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். காவல் நிலையத்தில் சுகுமாரை மன ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்‌. இதனால் அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், சுகுமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்ட ரீதியாக நடவடிக்கைக்கோரி எடுக்க தலைமைச் செயலாளர், மனித உரிமை ஆணையம், டிஜிபி, போலீஸ் கமிஷனர், மயிலாப்பூர் துணை ஆணையருக்கு, வழக்கறிஞர் மூலமாக கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.    “சுகுமார் மீது கொலை வழக்கு உட்பட்ட 7 வழக்குகள் உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்காணிப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி சுகுமார் காவல் நிலையம் வரும்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். காவல்துறை அவரை எந்தவகையிலும்  துன்புறுத்தவில்லை”,  என்றனர்.

இதையும் படிக்க   }  அனுமதியின்றி அத்துமீறி பாஜக கொடி ஏற்றிய பாஜகவினர்..! அதிரடியாக கைது செய்த காவல்துறை..!