தாயின் சடலத்தை வீல்சேரில் எடுத்துச் சென்ற கொடூரம்!!!

மணப்பாறையில் இறந்த வயதான தன் தாயை  சக்கர நாற்காலியிலேயே வைத்து  சுடுகாட்டிற்கு எடுத்து சென்ற மகன். அனைவரின் உள்ளத்தையும் உறுக்குலைய செய்தது. 

தாயின் சடலத்தை வீல்சேரில் எடுத்துச் சென்ற கொடூரம்!!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 74.) கணவன் மனைவி இருவரும் மகன் முருகானந்தம் என்பவருடன் வசித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கவே அவரை அவரது மகன் முருகானந்தம் கவனித்து வந்துள்ளார்.

இருப்பினும் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண்ணான நிலையில் அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ராஜேஷ்வரி இறந்து விட்டார். வறுமை ஒருபுறம், அறியாமை மறுபுறம் என்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார் முருகானந்தம்.

பின், அக்கம் பக்கம் என யாரிடமும் ஏதும் சொல்லாமல் தன் தாயின் உடலை ஒரு வீல் சேரில் அமர வைத்து கட்டி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகன மேடை அமைந்துள்ள செவலூர் பிரிவு சாலைக்கு எடுத்து சென்றுள்ளார்.

வீடிவதற்குள் உடலை எடுத்து சென்ற முருகானந்தம் தகனம் செய்திட எரிவாயு தகன மேடை பராமரிப்பாளரான ஸ்ரீதரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் சுடுகாட்டின் அருகே உள்ளவர்கள் பார்த்த போது இறந்த மூதாட்டியின் உடல் வீல் சேரில் எடுத்து வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சுடுகாட்டிற்கு வந்த பராமரிப்பாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்து அரசின் பல்வேறு உதவிகள் உள்ள நிலையில் ஏன் இது போன்று வீல் சேரில் உடலை கொண்டு வந்தீர்கள் என்று கேட்ட போது தெரியாமல் இதுபோன்று செய்து விட்டேன் என்று கூறினார்.

பின்னர் எரிவாயு தகன மேடை பணியாளர் உடலை பெற்றுக்கொண்டு முறைப்படி இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தார். அறியாமை மற்றும் வறுமையால் நிகழ்ந்த சம்பவம் ஒட்டு மொத்த மக்களின் உள்ளங்களையும் உறுக்குலைய செய்திருக்கிறது.