”போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படும்” தமிழக அரசு விளக்கம்!

”போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படும்” தமிழக அரசு விளக்கம்!

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு  விளக்கமளித்துள்ளது.

2019ம் ஆண்டின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான  அபராதத்தை  உயர்த்தி தமிழக அரசின் உள்துறை தரப்பில் கடந்த (2022) ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இருந்தும் விதிமீறல்கள் தொடர்வதால்,  அரசாணையை தீவிரமாக அமல்படுத்தும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், அபராதத் தொகையை உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை போக்குவரத்து மற்றும் காவல் துறைகளை சேர்ந்தவர்கள் தயக்கம் காட்டுவதாகவும், இதை சாதகமாக பயன்படுத்தி விதிமீறி வாகனங்களை இயக்குவது தொடர்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேகமாக செல்வது, போதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனம் இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் கொள்ளை, நகைபறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : முருகனின் 6 படை வீடுகளில் சிறப்பு பூஜைகள்...ஆடி கிருத்திகையையொட்டி குவிந்த பக்தர்கள்!

சிறிய சாலையில் செல்லும் இரு சக்கர வாகனம், ஷேர் ஆட்டோ முதல் நெடுஞ்சாலையில் இயங்கும் கன ரக வாகனங்கள் வரை போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால் உயிரிழப்புகளும், காயமடைந்து உடலுறுப்புகளை இழப்பதும் தொடர்கதையாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

விதிமீறலில் ஈடுபடுவோரை மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பணியாற்ற உத்தரவிட வேண்டுமென தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு பரிந்துரை செய்து ஜூலை 4ஆம் தேதி கடிதம் அனுப்பியதாகவும், அதை பரிசீலிக்க வேண்டுமெனவும் மனுவில்  கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா விளக்கம் அளித்தார். 

இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  குறிப்பிட்டு எந்த சம்பவத்தையும் மனுவில் தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காடிய நீதிபதிகள், போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட  அரசாணையை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.