மீனவர்களின் பிரச்னை முடிவுக்கு வந்தது...! அமைச்சர் மா.சுப்பிரமணியம்...!! 

மீனவர்களின் பிரச்னை முடிவுக்கு வந்தது...! அமைச்சர் மா.சுப்பிரமணியம்...!! 

முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரை, லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அகற்றும் பணியில் சென்னை மாநாகராட்சி ஈடுபட்டு வருவது தொடர்பாகவும், இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவது தொடர்பாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், லூப் சாலையில் 3 நாட்களாக போராடிவரும் மீனவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென சபாநாயகருக்கு தீர்மானத்தை முன் வைத்தார். இதே தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சியை  சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பேசினர். 

அதற்கு விளக்கமளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கருதி நீதிபதிகள் தானாக முன்வந்து எடுத்த வழக்கின் காரணமாக கடைகள் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேசினார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மீனவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும்  அவர்களது உரிமைகளை  பாதுகாக்கவும்  நீதிமன்றத்தில்  மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாட முதலமைச்சர் ஏற்பாடு செய்ததாக அமைச்சர் விளக்கினார். 

மேலும், மீனவர்கள் வசிக்கும் இடங்களில் இருபுறமும் கடைகள் வைப்பதால் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன் படி வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக இன்றுடன் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அமைச்சர் பேரவையில் விளக்கமளித்தார்.