பையை மறந்த மாணவன்.. பேருந்தில் ஏறி எடுக்க முயன்றபோது.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!!

சென்னையில் பள்ளி வாகனம் மோதி, இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பையை மறந்த மாணவன்.. பேருந்தில் ஏறி எடுக்க முயன்றபோது.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!!

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் தீக்சித், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற தீக்சித், புத்தகப்பையை வாகனத்தில் மறந்து வைத்துவிட்டு கீழிறங்கியுள்ளார். பின்னர் பையை எடுப்பதற்காக மீண்டும் வாகனத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. இதனை அறியாத வாகன ஓட்டுனர், வாகனத்தை இயக்கியபோது, மாணவன் தீக்சித் தவறி கீழே விழுந்துள்ளான். மாணவன் மீது வாகனம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே தீக்சித் துடிதுடித்து உயிரிழந்தான்.

தகவலறிந்து சென்ற வளசரவாக்கம் போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பள்ளி வாகன ஓட்டுனரான, முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளிக்குமாறு, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.