சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை குழந்தை உயிரிழந்த சோகம்...

கடலூரில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை குழந்தை உயிரிழந்த சோகம்...

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - தனலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கிரிஷ் என்ற 5 வயது மகனும், கிருபாஸ்ரீ என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.  கடந்த 26-ம் தேதி மணிகண்டன் தனது மனைவி தனலட்சுமியிடம் வயல் வேலைக்கு வந்திருப்பவர்களுக்கு சேர்த்து மதிய உணவு தயார் செய்யும்படி கூறிவிட்டு வயலுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து சாப்பாடு மற்றும் சாம்பார் ஆகியவற்றை தயார் செய்த தனலட்சுமி பெரிய பாத்திரத்தில் அதனை ஊற்றி சமையல் அறையில் வைத்திருந்தார். இதில் சாம்பார் கொதிக்க கொதிக்க இருந்துள்ளது. குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக தனலட்சுமி சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை கிருபாஸ்ரீ தாயின் பின்னால் சென்றுள்ளார். தனலட்சுமி குழந்தையை கண்காணித்தவாறு அடுப்பில் பாலைக் காய்ச்சிக்கொண்டிருந்தார். சூடாக சாம்பார் ஊற்றி வைத்த பாத்திரத்தின் மூடியை குழந்தை பிடித்து இழுந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை சாம்பார் ஊற்றி வைத்திருந்த பாத்திரத்திற்குள் தவறி விழுந்தது. இதில் குழந்தையின் உடல் வெந்து போனது.

குழந்தை வலியால் அலறியுள்ளது. அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. குழந்தை சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.