ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக உயர்வு...
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுக்கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளன. இந்த அணைகளிலிருந்து, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இது பின்னர் 6 ஆயிரத்து 841 கன அடியாக குறைந்தது. மேலும் டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து ஒட்டுமொத்தமாக 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.