தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை - மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை - மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!

குரங்கு அம்மை பாதிப்பு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்:

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பு:

புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் பதவியேற்ற பின் புற்றுநோய்க்காக சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ஓராண்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் குரங்கு அம்மை இல்லை:

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்டார். அதற்காக குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை, அவ்வாறு இருந்தால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்தார். அதேசமயம்  77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு என்பது உள்ளது என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பன்னாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அதேபோல் இந்த 4 மாவட்டங்களிலும் இதற்கென மருத்துவமனைகளில் அறைகள் ஒதுக்கி படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.