சென்னை மக்களுக்கு ஹப்பி நியூஸ்...ஏரிகள் நிரம்பி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதாம்..!

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர், பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்தடைந்துள்ளதால், சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு ஹப்பி நியூஸ்...ஏரிகள் நிரம்பி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதாம்..!

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலத்துடன் தெலுங்கு-கங்கா கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரூம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் என வருடத்திற்கு 12 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுறது... 

இந்நிலையில் கடந்த மாதம் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ஆயிரத்து 900 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து 600 கன அடி தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டிற்கு வந்தடைந்தது. அங்கிருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு 540 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு இதுவரை ஒரு டிஎம்சி தண்ணீர் வந்தடைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... 

தொடர்ந்து, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவான 35 அடியில் தற்போது 26 அடி நீர் இருப்பு உள்ளது. தற்போது 540 கன அடி கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் 831 கன அடி நீர் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் முக்கிய ஏரிகள் நிரம்பி வருவதால்,  தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.