மணப்பாறை அருகே நிகழ்ந்த கோர விபத்து.. 2 பேர் உடல் கருகி பலி!!

மணப்பாறை அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மணப்பாறை அருகே நிகழ்ந்த கோர விபத்து.. 2 பேர் உடல் கருகி பலி!!

இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட விபத்து

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் காற்றாலையின் உதிரி பாகங்களை இறக்கி விட்டு டாரஸ் லாரி ஒன்று  துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி எதிரே சிமெண்ட் ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

2 பேர் உடல் கருகி பலி

இந்த விபத்து நிகழ்ந்த உடன் டாரஸ் லாரியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இரண்டு லாரிகளிலும் தீ கொளுந்து விட்டு ஏறிய தொடங்கியது. . இந்நிலையில் அதில் இருந்து உடலில் பற்றி எரியும் நெருப்புடன் காட்டுப் பகுதிக்கு ஓடிய நபர், சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் போராட்டம்

ஆனால் தீ கட்டுக்குள் வராததை அடுத்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டு தீயணைப்பு வாகனங்களும் கடுமையாக இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

உயிரிழந்தவர்களின் தகவல்

அதன் பின்னர் தான் டாரஸ் லாரிக்குள் சிக்கி இருந்த மற்றொருவரும் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. கிரேன் உதவியுடன் லாரியில் சிக்கி இருந்தவரின் உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்த இருவரும் உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியை சேர்ந்த இந்திர மணிபால் (37) (டாரஸ் லாரி ஓட்டுநர்), உதவியாளர் பவன் பட்டேல் (25) ஆகியோர் என்பது தெரியவந்ததை அடுத்து இருவரின் உடல்களையும் துவரங்குறிச்சி போலீசார் மீட்டு பிரத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.