பள்ளிகளில் தடுப்பூசி மையங்கள் தொடரலாம்...  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு...

பள்ளி கூடங்களில் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் தடுப்பூசி மையங்கள் தொடரலாம்...  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு...

சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் திறந்து வைத்தனர். 

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், எம்.கே.மோகன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்,அண்டை மாநிலங்ககில் கேரளாவில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வருவோர் கட்டாயம் RTPCR பரிசோதனை சான்று அல்லது இரு தவணை தடுப்பூசி போடப்பட்ட சான்று கட்டாயம் என தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களில் தினசரி 5 லட்சம் அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 5.58 லட்சம் பேருக்கு நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் 200 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது போல் மற்ற மாவட்டங்களிலும் கூடுதல் தடுப்பூசி முகாமிகளை அதிகரிக்கவும் மலைவாழ் மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மதத்திற்காக 1கோடியே 4 லட்சம் தடுப்பூசி மத்திய அரசு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக யாருக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடுவது இல்லை ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி போட இருக்கிறோம் என்றும் பள்ளி கூடங்களில் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிக மக்கள் கூடும் மையங்கள் மட்டும் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார்.

நாளை கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர் என்பதை ஆய்வு செய்ய உள்ளோம். கல்லூரிகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.